Monday, February 5, 2007

ஊடகங்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறைகள்


எஸ்.நயனகணேசன்

'எனது மகள் மீது பயங்கரவாதியென பழி சுமத்துவது அநியாயம்.எனது மகள் பயங்கரவாதியும் அல்ல புலியும் அல்ல.விசாரணை செய்வதாக சீ ஐ டியினர் தெரிவிக்கின்றனர்.ஆனால் அவற்றில் ஒன்றும் உண்மையில்லை.தேடவேண்டிய தேவை இருந்திருப்பின் தகவல்களை தேடியிருக்கலாம்" என கவலை தோய்ந்த முகத்துடன் எதுவித குற்றச்சாடடடுக்களுமின்றியும் விசாரணைகளுமின்றியும் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மௌபிம பத்திரிகையின் செய்தியாளரான பரமேஸ்வரியின் தந்தை முனுசாமி தெரிவிக்கின்றார்.
கடந்த வருடம் 2006 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கொழும்பில் வைத்து மௌபிம என்ற வார பத்திரிகையின் ஊடகவியலாளரான முனுசாமி பரமேஸ்வரி கைது செய்யப்பட்டார்.
இவரின் விடுதலைக்காக இலங்கையில் இயங்கும் அனைத்து ஊடக நிறுவனங்கள் , ஊடக அமைப்புக்கள் மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்கள் என அனைவரும் இணைந்து அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்ற போதிலும் அவரை விடுதலை செய்வதில் அரசாங்கம் மெனமாகவே இருந்து வருகின்றது.
இவரின் விடுதலைக்காக தேசய மட்டத்தில் அண்மைக்காலம் வரை மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு ஆதரவு செதரிவித்து கடந்த 31 ஆம் திகதி சர்வதேச ரீதியிலும் அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் சர்வதேச ஊடக அமைப்புக்களும் பிரச்சாரத்தினை மேற்கொண்டன.இதில் முக்கிய விடயம் யாதெனில் இன்று மரணப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கும் இலங்கையின் ஊடகவியலை காப்பாற்றுவதற்கு அரச மட்டத்தில் எந்தவிதமான உத்தரவாதமோ பாதுகாப்போ இல்லையென்பதாகும்.அவற்றினை அரசாங்கம் மேற்கொள்வதற்கு பதிலாக அவற்றை அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.இவற்றுக்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொண்டு செல்லும் பத்திரிகை அச்சுக்கான மூலப் பொருள் தடையை கூறலாம்.அது மட்டுமன்றி மறைமுகமாக யாழில் வாழும் ஆறு லட்சம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தினை நசுக்கும் உரு செயலாகவே இதனை எண்ணத் தோன்றுகிறது.
எந்தவொரு யுத்தத்திலும் முதலில் உயிர் துறப்பது உண்மையே.அது இன்று இலங்கையில் அமோகமாக அரச தரப்பில் விமர்சையாக மேற்கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகிறது.
இவை இவ்வாறிருக்கையில் கடந்த வருடம் உலக பத்திரிகை சுதந்திர தினம் இலங்கையில் கொண்டாடப்பட்டு போது அதில் பங்கேற்றிய சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கிறிஸ்தோபர் வொறன் 'இலங்கையின் ஊடகவியல் மரணப்பொறிக்குள்" எனத் தெரிவித்திருந்த கூற்;று இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகள் அக்கூற்றுக்கு மேலம் வலுச்சேர்த்துள்ளது.
அதேவேளை ஊடகவியலாளர் பரமேஸ்வரியை விடுதலை செய்யக் கோரி சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் (International Fedaration of Journalists) மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் (Free Media Movement) ஆகிய ஊடக அமைப்புக்கள் உட்பட இலங்கையின் ஏனைய ஊடக அமைப்புக்கள் அவரை விடுதலை செய்யக்கோரி அரசாங்கத்தை வலியுறுத்தி விடுத்திருக்கின்ற அறிக்கை மிகவும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கொண்டுள்ளது.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
பரமேஸ்வரி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரிலே கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இதுவரை அவருக்கெதிரான எந்த ஒரு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.இதுவரை அவரை சட்டத்தரணிகளுக்கோ அவரது ஆசிரியருக்கோ ஊடக நிறுவனங்களுக்கோ அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
23 ஆம் திகதி ஜனவரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மேலும் 30 நாட்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைப்பதில் பயங்கரவாத பிரிவினர் வெற்றி கண்டுள்ளனர்.இது மிகவும் வெட்கக் கேடான நிலைமை.ஒரு பெண் பத்திரிகையாளரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அவர் தடுப்பு காவலில் வாடுவதை உங்களுடைய அரசாங்கம் எதுவுமே செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இந்த பயங்கரமான சம்பவமானது ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு பாரதூரமான விளைவுகளை கொண்டிருக்கிறது.
தமிழ் சமூகங்கள் தொடர்பான விவகாரங்களை அறிக்கையிடுவது தொடர்பில் பரமேஸ்வரி மிகவும் அறியப்பட்ட ஒருவர்.கொழும்பில் காணமால் போனவர்கள் பற்றியும் அவர் புலனாய்வு செய்திகளை வெளியிட்டுள்ளார்.அவரின் நடுநிலைமையான ஊடகவியல் மற்றும் அவருக்கெதிராக ஆதாரமற்ற வகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பின்னணியிலும் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனமானது மீண்டுமொரு முறை இந்த அவசரகால ஒழுங்கு முறைகள் (பயங்கரவாத தடை மற்றும் தடுப்பு மற்றும் குறிப்பிடப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள்) அவை ஊடகத்தை அடக்குவதற்கும் சுதந்திரமான குரல்களை நசுக்குவதற்கும் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதாக தனது கவலைகளை வெளியிடுகிறது.
எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாமலும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் அவரை எந்தவிதமான பயங்கரவாத செயற்பாடுகளுடனும் தொடர்புபடுத்த தவறிய நிலைமையிலும்; அவரை விடுதலை செய்ய அரசாங்கம் தலையிடுமாறு அரசாங்கத்தை சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் வலியுறுத்துகிறது.
பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் பெறுமதிகளை அரசாங்கம் உணர்ந்து கொள்வதாக காட்டுவதற்கும் பரமேஸ்வரியை உடனடியாக விடுதலை செய்வதற்கும் இது பொறுத்தமான நேரம்.
மிகவும் ஆக்கப்பூர்வான அறிக்கை பரமேஸ்வரியை விடுதலை செய்வதற்கு அரசாங்கததிற்கு அழுத்தத்தினை வழங்கும் என நம்புகின்றோம். இல்லாவிடில் தொடர்ந்தும் ஊடகவியலாளர் கொலை செய்யப்படுவதும் கைது செய்யப்படுவதும் நீண்டு செல்வதற்இடமளிப்பதா என்பதனை நாம் பொறுத்திருந்துத்தான் பார்க்க வேண்டும்.

No comments: